ஆர்தர் சி. கிளார்க் (1917 - 2008)

புகழ்வாய்ந்த விஞ்ஞானக் கதைசொல்லியும், செய்கோள்கள் (satellites) நம் உலகிற்கு மேலே
வட்டமாய்ச் செல்லும் கிளார்க் பாதையைக் கணக்கிட்டவருமான ஆர்தர் சி. கிளார்க் இயற்கையோடு இன்றுக் கலந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேல் கொழும்பு நகரத்தில் வசித்தவர் கிளார்க். இன்று நாம் பயன்படுத்தும் அதிதுரிதத் தொலைக்காட்சி, போன்கள், இணையம் போன்றவற்றின் அடிப்படை ~ மனித குலத்தின் தொடர்பாடலுக்குக் ~ கிளார்க் வட்டப்பாதை.


Clarke Orbit computation:
http://newton.ex.ac.uk/research/qsystems/people/sque/physics/geostationary-orbit/

The 1945 Proposal by Arthur C. Clarke for Geostationary Satellite Communications
http://lakdiva.org/clarke/1945ww/

அந்தோணி முத்துவின் டிவி செவ்வி எவ்வாறு? எப்போது?

வாழ்விலும் வலைப்பதிவுலகிலும் சாதனைகள் புரிந்துவரும் அந்தோணி முத்துக்கு எல்லா உதவிகளும் கிடைக்குமாறு தமிழர்கள் உதவி செய்யவேண்டித் தமிழ்மணம் வலைத்திரட்டியில் அ. முத்துவிற்கு உதவி கோரி மின்னி (ticker) சில வாரங்கள் சுடரொளி வீசியது. இன்று பலரும் அவருக்குப் பெரும் உதவி செய்கிறார்கள். இப்போது, ஆனந்த விகடனிலும் அந்தோணி முத்து பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. 'என்றென்றும் அன்புடன்' பாலா எழுதியுள்ள தோழர் முத்து பற்றிய பதிவு: http://balaji_ammu.blogspot.com/2008/03/427.html
மக்கள் டிவியில் பாலன் மூலமாக எப்படி முத்தின் நேர்காணலை ஒளிபரப்புவது என்பதற்கு வழிவகையை அப்துல் ஜப்பார் அவர்கள் முத்தமிழ் குழுமத்தில் எழுதியிருக்கிறார்:

"மதுரா ட்ராவல்ஸ் கலைமாமணி வி.கே.டி.பாலன் பொதிகை தொலைக் காட்சியில் "வெளிச்சத்தின் மறுபக்கம்" என்கிற ஒரு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். 310 வஆரங்களுக்குப் பிறகு அது நின்று போய், இப்போது மக்கள் தொலைகாட்சியில் "இவர்கள்" என்ற பெயரில் வருகிறது. நான் ஏப்ரல் முதல் வாரம்தான் தாயகம் திரும்புகிறேன். திரு அந்தோணி முத்து அவர்களோ அல்லது அவர் சார்பாக வேறு யாருமோ பாலன் அவர்களைத் தொடர்பு கொண்டால் இனி வரும் வாரங்களில் நிச்சயம் அவரது பேட்டி இடம் பெறும்.

அந்தோணிமுத்து போன்ற தன்னம்பிக்கை மிகுந்த மனிதர்கள் தமிழ் உலகுக்கு உரிய முறையில் தெரியப் படுத்தப் பட வேண்டும் என்பது தான் என் அவா.

அன்புடன் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்."

சீக்கிரமாக நண்பர் முத்துவின் பேட்டி தமிழ்நாட்டு டிவியில் தெரிய ஏற்பாடு செய்யுங்கள். நன்றி, நா. கணேசன்

ஆனந்தவிகடனில் அந்தோணி முத்து: ''உலகம் என் உள்ளங்கையில்''

செங்குன்றத்தில் குறுகலான தெருவில் இருக்கிறது, பத்துக்கு ஐந்து அளவுள்ள அந்த ஒற்றை அறை. கலைந்து கிடக்கும் மெத்தையில் உட்கார்ந்து டைப் அடித்துக்கொண்டு இருக்கிறார் அந்தோணி. வலைப்பூ (blog) எழுத்தாளரான அந்தோணிக்கு கைகளைத் தவிர, வேறு எந்த உறுப்புகளும் செயல்படாது. ஆனாலும் அந்தோணியின் கனவுகளும், கற்பனைகளும் சிறகு முளைத்து அந்த ஒற்றை அறையில் இருந்து கிளம்பி இன்று உலகை வலம் வந்துகொண்டு இருக்கின்றன.

என்னுடைய மிகப் பெரிய பலம் தன்னம்பிக்கை. 'பாஸிட்டிவ்' என்கிற வார்த்தையைச் சொல்லும்போதே ஒரு எனர்ஜி கிடைக்கும்! அதனால என் பேருக்கு முன்னாடி 'பாஸிட்டிவ்' சேர்த்துக்கிட்டு, 'பாஸிட்டிவ் அந்தோணி' ஆகிட்டேன். எனக்கு இது சில்வர் ஜூப்ளி வருஷம்! 25வது வருஷமா இந்த ரூம்லேயே அடைஞ்சு கிடக்கிறேன். ஆனா, என் உலகம் ரொம்பப் பெரிசு சார்!'' அழுத்தமாகக் கை குலுக்கியபடி பேச ஆரம்பிக்கிறார் பாஸிட்டிவ் அந்தோணி.

''எனக்குச் சொந்த ஊரு திருவண்ணாமலை பக்கம்! பெரிய குடும்பத்தோட கடைக்குட்டி நான். எல்லோர் மாதிரியும் நார்மலா பிறந்து வளர்ந்தவன்தான். பயங்கரமா சேட்டை பண்ணுவேன். ஒரு இடத்துலயும் நிக்காம ஓடிக் கிட்டே இருப்பேன். துறுதுறுன்னு எதையாவது பண்ணிக்கிட்டு இருப் பேன். எப்பவும் விளையாட்டுதான்.என்னோட 11வது வயசுல வீட்டுக்கு பக்கத்துல இருக்குற கிணத்துல தவறி விழுந்தேன். கிணத்துல ஒரு சொட்டுத் தண்ணிகூட இல்லை. அவ்ளோ உயரத்துல இருந்து விழுந்ததுல முதுகெலும்பு முறிஞ்சு போச்சு! மரண வலின்னு கேள்விப்பட்டிருப்போமே, அதை அன்னிக்கு அனுபவபூர்வமா உணர்ந்தேன்.கால்கள்ல எந்த உணர்ச்சியும் இல்லை. கைகளைத் தவிர உடம்புல எதுவும் செயல்படலை. எனக்கு வந்திருக்கிறது 'பாரலிசிஸ் அட்டாக்'னு டாக்டர் சொன்னார். ஓடிட்டே இருந்தவன் ஒரேயடியா முடங்கிட்டேன். ஸ்கூலுக்குப் போகாம வீட்டுல அடைஞ்சு கிடப்பது மகா வேதனையாக இருந்தது. வெறுமை உணர்வும் தனிமை உணர்வும் என்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுக் கிட்டு இருந்தன. யாராவது என் வயிற்றை அழுத்திவிட்டாதான் என்னால இயற்கை உபாதைகளைப் கழிக்கமுடியும். வளர்ந்து நிக்குற வயசுல, எந்த ஒண்ணுக்கும் குழந்தை மாதிரி மத்தவங்களை எதிர்பார்த்து வாழறதைப் போல கொடுமை வேற இல்லை. ஏதாவது அதிசயம் நடந்து, நான் பழையபடி எழுந்து நடக்க மாட்டேனானுஏங் கிட்டு இருந்தேன். அப்பா, அம்மா இறந்த பிறகு, என் அக்கா பவுலீனா தான் எனக்கு இன்னொரு அம்மாவா இருந்து பார்த்துக்கிட்டாங்க.

நம்ம வாழ்க்கை இனி இப்படித் தான் இருக்கும்கிற உண்மை புரிய ஆரம்பிச்சுது. ஆரம்பத்துல தற்கொலை பண்ணிக்கலாம்னு கூட யோசிச்சிருக்கேன். இளையராஜா வோட இசைதான் என்னை மீட்டெடுத்துச்சு. அவரோட பாடல் களைக் கேட்கக் கேட்க மனசு லேசாச்சு! ஒரு கீபோர்டு வாங்கி இளையராஜா பாடல்களை வாசிக்க ஆரம்பிச்சேன். நம்பிக்கை வர ஆரம்பிச்சுது. கழுத்துக்குக் கீழே முடக்கப்பட்ட சக்தி முழுசும் என் மூளையில் இருக்குறதா நினைச்சேன். 24 மணி நேரமும் இசையோடு விளையாட ஆரம்பிச்சேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., மியூஸிக் அஞ்சல் வழியில படிச்சேன். இசையோட நுணுக்கங் கள் பிடிபட ஆரம்பிச்சதும், நானே டியூன் போட்டு மியூஸிக் ஆல்பம் பண்ணினேன். ராகங்களை அடிப் படையாகக்கொண்ட ஒரு சவுண்ட் சிஸ்டத்தை 90ம் வருஷம் கண்டுபிடிச்சேன். அந்த சிஸ்டம் இப்ப உள்ள டி.டி.எஸ்., டால்ஃபியைப் போன்றது. நானே சுயமா உருவாக்கினது. அதுக்கான பேட்டன்ட் வாங்க, என்னால அலைய முடியலை. அதனால அந்த முயற்சியை அப்படியே விட்டுட்டேன். என்னோட மியூஸிக் ஆர்வத்துக்குச் செலவுபண்ற அளவுக்குக் குடும்பத்துலயும் வசதி இல்லை. நம்மளால இசையை ரசிக்க மட்டும்தான் முடியும்னு புரிஞ்சுது. பத்து நிமிஷம் அழுதுட்டு என் கீபோர்டுக்கு 'குட் பை' சொல்லிட்டேன்.

இசையை விட்டுப் புத்தகங்கள் பக்கம் திரும்பினேன். ஜெயகாந்தன், லா.ச.ரா, தி.ஜானகிராமன், சுஜாதானு படிக்க ஆரம்பிச்சேன். சிட்னி ஷெல்டன், ஜெஃப்ரி ஆர்ச்சர், ஜே.கே.ரௌலிங்னு இங்கிலீஷ் நாவல்களையும் விடலை. ரேடியோ மெக்கானிசம் பழகினேன். என் ஃப்ரெண்ட் 'கோமதி'னு ஒரு டீச்சர் எனக்கு கம்ப்யூட்டர் ஒண்ணு வாங்கிக் கொடுத்தாங்க. மற்ற நண்பர்கள் சாஃப்ட்வேர் கொடுத்தாங்க. ஒரு கம்ப்யூட்டர், கீபோர்டு, மவுஸ், ஹெட்ஃபோன், டெலிபோன் இவ்வளவுதான் என்னோட சொத்து. ஆனா, அதை வெச்சே வாழ்க்கையை வாழணும்னு முடிவு பண்ணினேன். இப்போ எனக்கு எம்.எஸ்.ஆபீஸ், ஃபோட்டோ ஷாப், டேட்டா என்ட்ரி எல்லாம் தெரியும். மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஷன் கத்துக்கிட்டு இருக்கேன்.. 'தமிழ்க்குஞ்சு'ங்கிற பேர்ல<http://positiveanthonytamil.blogspot.com) பேர்ல வலைப்பூ தொடங்கி, என்னோட கனவுகளை, என்னோட நினைவுகளை எழு திட்டு வரேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சுட்டு வருது.

இன்னும் படிக்கணும், நிறைய சம்பாதிக்கணும், ஸ்டீவன் ஹாக்கின்ஸ் மாதிரி பலபேருக்கு ரோல்மாடலா ஆகணும்னு எனக்குள் இருக்குற தாகங்கள் அதிகம்! நான் முழு வேகத்துல இயங்கும்போது, என் வேகத்துக்கு ஈடு கொடுக்காம இந்த எலெக்ட்ரானிக் பொருள்கள் அப்பப்போ மக்கர் பண்ணுது. இந்த கம்ப்யூட்டர் ரொம்பப் பழசாயிடுச்சு. என் வலது கண்ணுல பார்வை மங்கிட்டே வருது. ஒரு கையை சாய்ச்சுவெச்சு தொடர்ந்து டைப் பண்ண முடியலை. ஒரு லேப்டாப்பும், வீல் சேரும் இருந்தா நான் மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஷன் படிப்பை முடிச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவேன். அதை வாங்குறதுக்கான முயற்சிகள்ல இருக்கேன். பார்த்துட்டே இருங்க, என்னோட வாழ்க்கையில் புது அத்தியாயம் ஆரம்பிக்கப் போகுது!'' நம்பிக்கை சுடர்விடும் குரலில் பேசுகிறார் அந்தோணி.

ஆமோதிப்பது போல் ஒலிக்கிறது தொலைபேசி மணி!

நன்றி: விகடன் -ஆர்.சரண் படங்கள்: கே.ராஜசேகரன்

சிதம்பரத்தில் தமிழ் வழிபாட்டுரிமை

தில்லைப் புதர்ச்செடியின் பெயரால் இந்தியாவின் தலைநகருக்குத் தில்லி (dhillika) என்னும் நகர்ப்பெயர் தோன்றியிருக்கலாம். தில்லைச் செடி (முனைவர் இராமகி). தென்தில்லை அம்பலத்தைத் திருமதி. கீதா சாம்பசிவம், குமரன், ஜி. இராகவன் முதலியோரும் நாக. இளங்கோவனின் தில்லையில் நடக்கும் ஆயிரங்காலத்து அடாவடி!, மற்றும் கண்ணபிரான் இரவிசங்கரின் சிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி ஐயாவுக்கும் ஒரு பகிரங்கக் கடிதம்! ... என்று பல பதிவர்கள் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள், அன்னாருக்கு நன்றிகள் கோடி. சிதம்பரம் தீக்கிதர்கள் பற்றிய விவரணப்படம் இங்கே முன்னர்க் கொடுத்தேன்.



பாரிஸ் நகரில் குய்மெ (Guimet) அருங்காட்சியகத்தில் உள்ள ஆடவல்லான் (சதாநிருத்த ஆனந்ததாண்டவ மூர்த்தி) சோழர் காலத்தவர். அகஸ்டி ரோடின் என்னும் புகழ்வாய்ந்த சிற்பி 1913-ல் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி அழைப்பினால் சென்னை மியூசியத்தில் திருவாலங்காடு நடராஜரைப் பார்த்தபின் பிரெஞ்சு மொழியில் எழுதிய கவிதை, குறிப்புகளே உலகக் கலைவரலாற்றில் இந்தியக் கலைப்படைப்புகளைப் படிக்கவும் சேர்க்கவும் வித்தாக அமைந்தன.

தொல்பொருள் ஆய்விலே சிவ வழிபாடு பற்றித் தெரியவரும் உண்மைகள் சில. பெருங்கல் மூதாதையர் ஈமச் சின்னங்கள் (Megalithic burials, பாண்டுக் குழிகள்) கி.மு. 1000க்குப் பின்னர் இரும்பூழியில் (Iron Age) தென்னாட்டிலும், இலங்கையிலும் கிடைக்கின்றன. இவற்றில் குதிரைகள், கடிவாளங்கள், திரிசூலங்கள், ... கிடைக்கின்றன. ஆனால் அவற்றில் லிங்கங்கள் காணோம். இதற்கு, சிந்து சமவெளி உயர்நாகரிகம் அமைத்தோர் திராவிட மக்கள் என்று ஆராய்ந்துவரும் நண்பர் பேரா. ஆஸ்கோ பார்ப்போலாவின் கட்டுரையைப் படிக்கலாம். A. Parpola, 2002, Jl. of American Oriental Society, Pandaie and Sita on the historical background of the Sanskrit epics, vol. 122 (2), 2002 pp. 361-373. இது வேண்டுவோர் naa.ganesan@gmail.com என்னும் முகவரிக்கு மின்மடல் அனுப்பவும்.

முதன்முதலில் இலிங்க வழிபாட்டைத் தெளிவாக இந்தியாவில் கிடைப்பது காளத்தி அருகேயுள்ள மௌரியர் காலத்தைய குடிமல்லம் இலிங்கம் ஆகும் (கி.மு. 3-2ஆம் நூற்றாண்டு). இலிங்க வழிபாடு தொல்லியலின் படி, வடமதுரை போன்ற இடங்களில் ஏராளமாகக் கிடைக்கின்றன. 2-ஆம் நூற்றாண்டின் பின்னர் வெகுவாகப் பரவி, சாளுக்கியர், பல்லவர் குகைகளில் காண்கிறோம். இலிங்கோத்பவர் புராணம் (அண்ணாமலை) கூறும் கார்த்திகை விளக்கீடு விழாவாகக் கொண்டாடப்பட்டதைப் பல பாடல்களில் சங்க இலக்கியம் குறிக்கிறது. 5-7 நூற்றாண்டுகள் தென்னாட்டில் முழுஉருவ வழிபாடாகவும் சிவ வழிபாடு இருந்திருக்கிறது. சங்க இலக்கியத்தில் இலிங்கம் என்ற வார்த்தை இல்லை, ஆனால் சிவபெருமானின் உருவ வடிவம் பலவாறு வருணிக்கப்படுகிறது. அய்யனார், சாஸ்தா/ஐயப்பனை ஆரியன் என்பதும் ஐயனாரைக் குதிரையில் ராஜலீலாசனத்தில் வழிபடலும் காண்க. ஆரியன் எனச் சிவபிரானைத் திருவாசகம் தேவாரம் போன்றன போற்றும். உதாரணமாக, பொதிகை மலையில் உள்ள தெய்வம் சைவர்களுக்குத் தட்சிணாமூர்த்தியாக உருவானார், பௌத்தர்கள் மலயம்/பொதியில் மலையில் வாழ்வது அவலோகிதர் என்றனர் (கண்டவியூக சூத்திரம் (முதல் நூற்றாண்டு), பின்னர் யுவான் சுவாங் (7-ம் நூற்.)). பொதிகை மலையில் ஆரியன்காவு உள்ளது, ஆரியங்காவுப்பிள்ளை போன்ற பெயர்களைச் சாதாரணமாக நெல்லைப் பகுதிகளில் கேட்க முடிந்தது. வடக்கே தட்சிணாமூர்த்தி இல்லை. கர்நாடகா, ஆந்திராவிலேயே கார்வான் (காரோணம்) லகுளீசர் தக்கிணரின் இடத்தில் இருப்பார். பௌத்த அவலோகிதர் - சைவத் தக்கிணாமூர்த்தி விளக்கங்களை சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி, தமிழ் செம்மொழி என்று அறிவித்தபின் இந்திய அரசு நடத்தும் 'நோக்கு' (2008) ஆராய்ச்சி இதழில் வெளிவந்திருக்கும் என் கட்டுரையில் காணலாம்:
http://indology2.googlepages.com/padmakottar.pdf

தொன்மையான திராவிட மக்களின் இசை, கூத்து இவற்றின் மொத்த உருவாக விளங்கும் கூத்தப்பிரான் vs. இலிங்க வழிபாடு இழுபறிகளைச் (tussles back and forth) சிதம்பரத்தில் காணமுடிகிறது. நடராசர் திருக்கூத்து எங்கே அருமையாகப் பேசப்படுகிறது என்றால் திருமங்கை ஆழ்வாரின் வளமடல்களைப் படிக்கலாம். சகலாகம பண்டிதர் உமாபதி சிவாச்சாரியார் 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரது குஞ்சிதாங்க்ரிஸ்தவம், கோயிற்புராணத்திற்கும் வடமொழியில் ஏற்பட்ட சிதம்பர மாகாத்மியம் சொல்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன. தில்லைவாழ் அந்தணர்தான் திருச்சித்திரகூடத்தில் பெருமாளுக்கும் வழிபாடியற்றியுள்ளனர். ஸ்ரீவைஷ்ணவ பட்டாச்சாரியர்கள் தோற்றத்துக்கு (கி.பி. 1539) முன்னால் அப்படி. சோழர்கள் சிலரால் தில்லைப் பெருமாள் கடலுள் புகுந்தார், மீண்டும் விஜயநகர ஆட்சியில் புதிதாய்ப் பெருமாள் கோயில் ஏற்பட்டது. கீழ்த் திருப்பதியில் உள்ள உற்சவர் கோவிந்தராஜப் பெருமாள் தில்லையில் இருந்தவர்தான். புகலடைந்த அவருக்கு அதனால் தில்லைப் பாசுரங்களே திருப்பதியில் பாடப்படுகின்றன (வேங்கடவனின் அண்ணன் என்பது மரபு).

திருவாதிரை உற்சவத்தில் 'ககன கந்தர்வ கனக விமானத்தில்' ஆடல்வல்லபிரான் ஊருக்குள் (சென்னை) திருவீதி உலாப் போகும் காட்சி. பண்டை இலக்கியங்கள் கூறும் தில்லைவாழ் அந்தணர் என்பவர்கள் உமாபதி சிவாச்சாரியார் போன்ற ஆகம வழிபாடுள்ளோராக இருக்கலாம், தற்கால தீட்சிதர்கள் சிதம்பர மகாத்மியம் கூறும் வங்காளத்தில் இருந்து வந்தோராக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. காலங்காலமாக ஆட்சிகள் மாறும்போது, ஆகம வழிபாடுகள் தில்லையில் மங்கித் தாழ, வைதீக வழிபாடு மேலோங்கியிருக்கலாம். தமிழ்நாடு தமிழே தெரியாதோரால் சில நூற்றாண்டுகள் கைமாறியது வரலாற்றுண்மை. சீவைணவ சமயம் விசயநகர, பின்னர் நாயக்க மன்னருடன் சேர்ந்தமையாலும் காலத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொண்டு வளர்ந்துள்ளது. ஆழ்வார்களின் நாலாயிரத்தைக் காட்டாறு என்று சொன்னால், அதன் ஈடுகளின் நீண்ட நெடிய பாரம்பரியத்தை ஆற்றுப் பிரவாகத்துக்கு வியாக்கியானச் சக்கிரவர்த்திகள் அமைத்தளித்த கரைகள் என்னலாம். ஆச்சார்யார்கள் வாழையடி வாழையாக வழிகாட்டியதால் வேத சாம்யம், உபய வேதாந்தம், கருவறையில் பாசுரம் அனுசந்தித்தல் எல்லாம் ஏற்பட்டுவிட்டன. ஆனால், சைவத் திருமுறைகளுக்கு உரைமரபு இல்லை. தேவாரத்திற்கு உரையே 1960களில் தானே தமிழர் எழுதத் தலைப்பட்டனர். சைவத்தின் தேக்கநிலைக்கு பிற்காலச் சோழ பாண்டியர் ஆட்சி மறைந்தபின் பல நூற்றாண்டுகள் தமிழர் தமிழ்நாட்டை ஆளாததும் ஒரு முக்கியக் காரணந்தான். இன்னும் சைவம் 12-14 நூற்றாண்டுகளிலே நிற்கிறது. உதாரணமாக, எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும், சைவ சித்தாந்த மடங்கள் சமற்கிருத அர்ச்சனைக்குத் தான் ஆதரவு என்று 'அபிடவிட்' அளிக்கின்றன. மேலும் சிதம்பரத்தை ஒரு தனியார் சொத்து என்றே சைவமடங்களும் நிற்பது ஜனநாயக எதிர்நிலைப்பாடு தானே.

மரபுத் தமிழ் இலக்கியத்தில் சிவபெருமான் எழுதியதாகச் சொல்லப்படுபவை மூன்றே மூன்று பாடல்களே: (1) தருமிக்காக எழுதிய 'கொங்குதேர் வாழ்க்கை' (குறுந்தொகை) (2) பாணனுக்குப் பரிந்து சேரமான் பெருமாளுக்கு அனுப்பிய சிபாரிசுக் கடிதம் (பதினோராந் திருமுறை) (3) கொற்றவன்குடி உமாபதி சிவத்திற்குப் பெற்றான் சாம்பானுக்குத் தீட்சை அளிக்கச்
சிவனார் சொன்ன வெண்பா. இங்கே முக்கியமாய்க் கவனிக்க வேண்டிய செய்தி: சிவன் கடிதம் எழுதியது விளிம்புநிலை மாந்தருக்கேயாம். உமாபதி சிவம் தீட்சை பெற்றான் சாம்பானுக்கு அளித்த தில்லைத் தலத்தில் நந்தனார் உருவம் 1940வரை இருந்துள்ளது. அச்சிலை இருந்தமைக்குச் சான்றாக உவேசாவின் 'நந்தன் சரித்திரக் கீர்த்தனை' கோபாலகிருஷ்ண பாரதி வரலாற்றிலே விரிவாகக் காணமுடிகிறது.கொண்டல் சு. மகாதேவன் 1930களில் பார்த்ததைத் தில்லைவிடங்கன் வ. மெய்கண்டார் நடத்தும் இளந்தமிழன் (2005) சிற்றிதழில் கட்டுரை எழுதியுள்ளார். ஆனால் தீட்சிதர்கள் நந்தனார் நாயனாரை 50-60 வருடம் முன்பு அகற்றியிருக்கிறார்கள் என்பது வருந்தத்தக்கது. அச்சிலையைத் தேடியெடுத்துப் பிரதிஷ்டை செய்வதும், தமிழ்ப் பாசுரங்களை யார் வேண்டுமானாலும் பாட வழிவகுப்பதும் அரசால் நிரந்தரமாக்கப்படல் வேண்டும்.

ஹூஸ்டன் மீனாட்சி திருக்கோயிலில் மதுரைச் சகோதரர்கள் இராஜரத்தின பட்டர் (வயது 81), தங்கம் பட்டர் (85 வயது) ஆகிய ஆகம விற்பன்னர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். சென்னை உயர்நீதி மன்றம், டெல்லி உச்ச நீதிமன்றம் போன்றவற்றில் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், வெங்கட்ராம சாஸ்திரி போன்றோர் முழுமுயற்சியின் விளைவாக 20-ஆம் நூற்றாண்டில் 'சிதம்பரம் கோயில் ஒரு 'ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி', அது மடம், கோயில் (temple) அல்ல' என்று சட்ட பூர்வமாக எழுதப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சினை என்று விளக்கினர். அதற்கு ஆதரவைச் சைவமடங்கள் - தருமபுரம், திருவாவடுதுறை, ... போன்றவை தந்துள்ளன. எனவே, மெல்ல மெல்லத் தான் மக்களாட்சி அரசின் முயற்சிகள் நடைமுறைக்கு வரும். தீட்சிதர்களுக்கு வருமானம் பெருகவும், தனியாரிடம் விதவிதமாய் வசூல்கள் ஒழுங்கடையவும், கோயில் கட்டிடங்கள், மண்டபம், கோபுரம், விமானம் நல்லமுறையில் வெகுபணம் செலவிட்டு கும்பாபிஷேகம் நடந்து ஏனைக் கோவில்கள் போலச் செழிக்கவும் தில்லைத் திருத்தலம் ஒரு private property அன்று, அனைத்துச் சைவருக்கும் சொந்தமானது என்னும் நிலையை அரசு ஏற்படுத்தவேண்டும். 21-ஆம் நூற்றாண்டில் ஏற்படப்போகும் நீதிமன்றங்களும், சர்க்கார்களும் அந்நிலைக்குச் சரி செய்துவிடுவார்கள் என்று நம்புவோம். திருப்பதி, பழனி, மதுரை, ... போன்று வரும்படி சிதம்பரத்தில் மிகுங்காலத்தில் தமிழ்ப் பள்ளிகள், நுட்பக் கல்லூரிகள் தொடங்கி அரசாங்கம் நடத்தலாம். தென்னார்க்காடு மாவட்டத்தில் (உ-ம்: வள்ளலாரின் வடலூரில் ஒரு சர்வகலாசாலை), யாழ்ப்பாணத்திலுங் கூட, கல்லூரிகளுக்கு நிதி அளிக்கும் நிலை ஏற்பட வேண்டும்.

உசாத்துணை:
(1) மலர்மன்னன், நந்தன் இல்லாமல் நடராஜரா? திண்ணை வலையிதழ்,
http://groups.google.com/group/minTamil/msg/9199d189f81dc9ba
(2) அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், தீட்சிதர்கள் யார்?, ஆனந்த விகடன், மார்ச் 2008 http://unmaiudaiyaan.blogspot.com/2008/03/blog-post_4684.html
(3) Paul Younger, The Home of Dancing Sivan, The traditions of the Hindu temple in Citamparam, Oxford University Press, 1995.
(4) Kamil Zvelebil, Ananda Tandava of Siva-sadanrttamurti, Madras, 1985.
(5) Asko Parpola, Pandaie and Sita on the historical background of the Sanskrit epics, Journal of American Oriental Society, vol. 122 (2), 2002 pp. 361-373.

டி-கதிர்களைப் பயனிக்கும் காமிரா



வானியலில் மிக்க உபயோகமாகும் டெரா-ஹெர்ட்ஸ் கதிர்களைக் கொண்டு மக்களைச் சோதனை செய்யும் காமெரா (படத்தைப் பதிக்கும் படிமி) உருவாகியுள்ளது. அதனால், விமான நிலையங்கள், அரசியல் தலைவர்கள் கூட்டங்களில் நுழைவோர் தங்கள் ஆடைகளுக்கு உள்ளே வெடிகுண்டுகள், ஆயுதங்கள், போதைமருந்துப் பொட்டலங்கள் மறைபடத் தாங்கியுள்ளனரா என்று அறியமுடியும்.

இதுவரை எக்ஸ்-ரே கதிர்களைக் கொண்டியங்கும் படிமிகள் செய்த பணியை டி-ரே காமெராக்கள் வருங்காலத்தில் செய்யும்.

http://news.bbc.co.uk/2/hi/technology/7287135.stm

மெய்நிகர் மொபைல் எண் (Virtual Mobile Number) பெறுவது எப்படி?

மதுரைப் பேரா. கு. ஞானசம்பந்தனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 'எதுவென்றாலும் எஸ்எம்எஸ் அனுப்புங்கள்' என்றார்.

எனக்கு ஓர் இந்திய அல்லது அமெரிக்க மெய்நிகர் நகர்பேசி எண் (Virtual Mobile Number = VMN) வாங்க விருப்பம். அதாவது, அந்த VMN-ஐ இந்தியாவில் கொடுத்துவிட்டால், தமிழ்நாட்டில் இருந்து நண்பர்கள், உறவினர்கள் அந்த எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்ப வசதியாய் இருக்கும். வரும் குறுஞ்செய்திகளை, இந்த VMN வலைத்தளம் ஏற்றுக்கொண்டு பின் அவற்றை என் ஜிமெயில் முகவரிக்குமுற்செலுத்தினால் கூடுதல் சிறப்பாய் இருக்கும். அல்லது, அந்த வலைத்தளத்திற்குப்போய்ப் பார்க்கணும்.


This VMN number, either like in India 098, 094, ... or in USA starting with area coded 281 or 832, will be great.It should receive SMS messages and forward to my gmailid. I'm willing to pay some annual fee also.


இந்த வசதி பற்றிய செய்திகளுக்கு நன்றி.

அன்புடன், நா. கணேசன்

சிதம்பரம் தீட்சிதர்கள் (விவரணப்படம்)





தில்லை தீக்‌ஷிதர்கள் பற்றிய விவரணப்படம் பாருங்கள்.

தில்லைக் கூத்தன் திருவம்பலத்தில் தமிழ்மறைகள் பற்றிய பரபரப்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழும் சைவமும் தோழமை பாராட்ட வேண்டிய வேளையிது. ஆணைகளை இட்டுத் தமிழ்நாட்டு அரசாங்கம் நிலைநிறுத்தக் கட்டளை என்றும் இந்து நாளிதழ், பதிவுகளில் அறிந்தேன்.
http://www.hinduonnet.com/thehindu/holnus/002200803021550.htm
http://www.hinduonnet.com/thehindu/holnus/004200803041762.htm

கூத்தப்பிரான் தமிழ்நாட்டில் ஆட்சிகளில் ஆட்டங் கண்டபோது பல ஊர்களுக்கும் சென்று வசித்திருக்கிறார்: அப்போது 'நடராசர் இல்லாததில்லை' இல்லாத தில்லை என்றும், இல்லாதது இல்லை என்றும் பிரிக்கலாம் (Cf. God is nowhere/now here). சிலமுறை தீட்சிதர்கள் இல்லாமற்போய் புதிதாகவும் மன்னர்களால் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிஞர்கள் எழுதியதைப் படித்த நினைவு. சைவர்கள் பலர் நாளும் நடராசரை நேரில் தொழுவர். வேறெந்த ஊரிலும் இது சாத்தியமில்லை என்பதால் வேளாளரிடையே 'தில்லைப் பெண் எல்லை தாண்டாது' என்ற பழமொழி இருந்திருக்கிறது.

ஈழநாட்டாருக்கு மிக நெருக்கமான கோயில், ஆறுமுக நாவலர் அச்சகம் ஆரம்பித்த இடம் சிதம்பரம் ஆகும்.

மன்னுக தில்லை வளர்கநம்
    பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே
    புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன்
    அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவியறுக்க நெறிதந்த
    பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே!

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலுமிப் பூமிசை
என்அன்பு ஆலிக்குமாறு கண்டின்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே!

The darshan of the Dancing Lord at thillai thirucciRRambalam not only provides a great life after the life on this earth, right here see how rejoicable is this sight of this Blissful Lord!If it could be spent in rejoicing this Lord, can this life last forever? ~ Appar

நா. கணேசன்

கணினியும் செம்மொழி தமிழும் (சுஜாதா, 2005)

சென்ற மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம் என்ற மடலில் செம்மொழி தமிழ், அதன் ஆய்வுக்குக் கணினியின் பங்கு என்னும் சுஜாதா 2005-ல் எழுதிய கட்டுரையை அளிப்பதாக அறிவித்திருந்தேன். அனைவரும் ஒருமித்த எழுத்துருக் குறியேற்பில் எழுதுவதன் அத்தியாவசியத் தேவையைச் சுஜாதா அதில் குறித்துள்ளார். அவர் மேற்கோள் காட்டும் சங்கப்பாட்டு அகத்துறையைச் சேர்ந்தது. எனவே, அது புறநானூற்றில் இல்லை, குறுந்தொகைச் செய்யுள் அது. அச்சுப் பத்திரிகை இதழ்களில் வெகுசனங்களுக்கு விஞ்ஞானத்தின் மொத்த உருவாக முன்னிறுத்தப் பட்டவர் 'வாத்தியார்' சுஜாதா. தனியார் கான்வெண்டுகளால், தமிழ்க் கல்வி குறைந்துவரும் சமகாலத்தில் தமிழ்ப் பத்திரிகை வாசிப்பும் மத்யமரிடம் குறைதல் கண்கூடு. திரையுலகம் விசிடி, சின்னத்திரை என்று பெருகி விரிந்துவிட்டதால் 'வாத்தியார்' எம்ஜிஆர் போல ஒரு சகாப்தம் உருவாவது இனிமேல் கடினம். சினிமா போலவே, எழுதுதற்கு இணையம், வலைப்பதிவுகள், வலைத்திரட்டிகள், ... தோன்றிவிட்டன. முன்னெல்லாம் எழுதுவதைப் பலருக்கும் அளிக்கப் பத்திரிகையாளர் துணைவேண்டும். சென்னை மீடியா மன்னர்கள் வெளிச்சம் போட்டுக்காட்டி முயன்றாலும் இனி ஒரு 'வாத்தியார்' சுஜாதா போலத் தமிழ்நாட்டில் சகாப்தம் படைப்பது இயலாது. எழுத்தாளர்கள் எஸ்ரா, ஜெயமோகன் போன்றோர் வலைப்பதிவுகளைப் பார்த்தாலே தெரிகிறது: இனித் தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர்கள் எல்லோரும் விரைவில் ஆளுக்கொரு வலைப்பதிவு தொடங்கிவிடுவார்கள். இன்னும் இணைய வசதி போன்றவை தமிழ்நாட்டில் பெருகினால் 50 ஆயிரம், லட்சம் பேர் எழுத முன்வரவேண்டும். இல்லாவிடில், 'கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா" என்று வேறொரு சமயத்தில் பாரதிதாசன் வருந்தியது போலாகிவிடும். ஆயிரக் கணக்கில் தமிழ்நாட்டார் இணையத்தில் எழுதும் வேளையில் நிறுவன மயமாக்கப் பட்ட பத்திரிகைகள், சினிமா உலகம் தூக்கி நிறுத்தும் பிம்பங்களைத் தமிழ் மக்கள் உணர்ந்திட வாய்ப்புண்டாகும்.

இந்திரா காந்தி தொலைக்காட்சியை நாடுமுழுதும் தேர்தலுக்கு முன் ஒளிபரப்ப 'தூரதரிசனம்' தோற்றுவித்தார். அந்நாளில் டிவி அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் முழுமையும் இருந்தது. ஆனால் சில நாள்களில் கொலையுற்ற இந்திராவின் மறைவைப் பட்டிதொட்டியெங்கும் ஒளிபரப்பியது. இந்தியாவில் ஒரு தலைவரின் மரணம் பரவலாக ஒளிபரப்பப்பட்டது அதுவே முதன்முறை.
2005-ல் சுஜாதா ஒரே குறியேற்பில் தமிழில் வலையாட வேண்டும் என்றார், பலரின் உழைப்பும் இன்று வலைப்பதிவுலகைத் தோற்றுவித்துள்ளது. விகடன் யூனிக்கோடுக்கு மாறிவிட்டார். பத்திரிகைகளில் எழுதுவோரும், முதலாளிகளைத் தெரிந்தோரும் தினமலர், தினமணி, குமுதம், குங்குமம், ... எல்லாவற்றையும் யூனிகோடுக்கு மாறச் செய்யுங்கள். தமிழ்நாடு அரசின் வலைத்தளங்களை (உ-ம்: இணையப் பல்கலை, ... ) யூனிக்கோடில் தர வேண்டுகோளிடவும். ஸ்ரீமான் பொதுஜனத்துக்கு, (ஐடி கணிஞர், விஞ்ஞானிகளை விட்டுவிடுவோம்) கணினி, எழுதுரு (font), DTP என்ற கருத்தை எடுத்துச் சென்ற பொறிஞர் சுஜாதாவின் மறைவு முதன்முறையாக உலக ஊரில் பலராலும் வலைத்திரட்டிகள் வாயிலாக அலசி வலைபரப்பப்படுவது அறிவியல் விந்தை அல்லவா.

நா. கணேசன்


கணினியும் செம்மொழி தமிழும்
சுஜாதா (1935 - 2008)

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதற்காக கலைஞருக்குப் பாராட்டுவிழா ஒன்று சிறப்பாக நடைபெற்றது. 'பெரும்பாலானவருக்கு செம்மொழியானதில் என்ன லாபம்' என்பதைப் பற்றிய தடுமாற்றம் இருப்பது தெரிகிறது.

செம்மொழி என்பது என்ன? அதை முதலில் விளக்கிவிடுவோம். Classical Language என்று மேல்நாட்டினர் கருதுவது, புராதன கிரேக்க, லத்தீன் மொழிகள மட்டுமே. இதனுடன் ஒருசிலர் சமஸ்க்ருதம், சீனம், ஹீப்ரு போன்ற மொழிகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். பல்கலைக் கழகங்களில் சொல்லித் தருகிறார்கள். ஆராய்ச்சிக்காக நிதி தருகிறார்கள். தமிழும் இவ்வரிசையில் செம்மொழிதான் என்பதில் சிகாகோ, பர்க்லி, பென்சில்வேனியா போன்ற பல்கலைக்கழகர்களுக்கும், விஷயம் தெரிந்தவர்களுக்கும் எள்ளளவும் சந்தேகமில்லை. பெரும்பாலும் இந்தியத் துணைக்கண்டத்தில் இருப்பவர்களுக்குத்தான் இம்மொழியின் பழமையை உணர்த்த வேண்டியிருக்கிறது. மொழியியலாளர்களுக்கு மட்டும் தெரிந்தது ஏனையோருக்கும் தெரியப்படுத்துவதுதான் இப்போது நிகழ்ந்திருக்கிறது.

செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டதால், பல பல்கலைக்கழகங்கள் தமிழையும் தங்கள் மொழியியல் சார்ந்த பாடங்களிலும் ஆராய்ச்சிகளிலும் சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் என்ன என்ன கவனிப்பார்கள்?

தமிழினத்தின் கலாச்சார வேர்களை அவர்கள் ஆராய்வார்கள். நவீன மொழிகளில் குறிப்பாக திராவிட மொழிகளின் இலக்கண அமைப்புகளுக்கும், வாக்கிய அமைப்புகளுக்கும் செம்மொழியில் அடையாளங்களைத் தேடுவார்கள். வேர்ச்சொற்களை ஆராய்வார்கள். அந்தச் சொற்கள் எப்படி நவீன இந்திய, உலக மொழிகளில் குறிப்பாக திராவிட மொழிகளில் பரவின; மாறின என்பதைப் பற்றியும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவரும். செம்மொழியாக தமிழைப் படிப்பவர்களுக்கு, மற்ற மொழிகளில் அவர்களின் திறமை எவ்வாறு அதிகரிக்கும் என்பதை ஆராய்வார்கள். செம்மொழி இலக்கியங்களையும், இலக்கணங்களையும், அதன் கலைகளையும், பண்பாட்டையும் உன்னிப்பாக கவனிக்கும்போது பல புதிய உண்மைகள் வெளிப்படுவதை நம்மால் உணர முடியும்.

உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் ஐநதுவகை மன்றங்களில் இந்திரவிழாவெடுத்த காதையில் வெள்ளிடை மன்றம் என்ற ஒன்றின் வருணனை வருகிறது. நம்மை வியக்க வைக்கிறது. புகார் நகருக்கு வரும் புதியவர்கள் பல இடங்களில் தங்கள் தலைச்சுமையை இறக்கி, பெயர் ஊர் எல்லாம் குறிப்பிட்டு சரக்குப் பொதிகளை விட்டுவைத்து, எந்தவித பாதுகாப்பும் இன்றி ஊர் சுற்றப் போய்விடுவார்களாம். அவைகளை யாராவது கவர்ந்து செல்ல முயன்றால், 'திருடன்... திருடன்...' என்று கூவி, நான்கு காதம் வரை கயிற்றால் அவர்களைச் சுண்டி எழுப்பும் பூதம் ஒன்று சதுக்கத்தில் இருப்பதாகக் செய்தி உள்ளது. இதை, நவீன கார்த் திருடர்கள் வாகனத்தின் மேல் கை வத்தால் ஊளையிட்டு ஊரைக் கூட்டும் 'பர்க்ளர் அலார்'முடன் ஒப்பிடலாம். இவ்வாறு செம்மொழி இலக்கியங்களில் உள்ள நவீன செய்திகள் உன்னிப்பாக ஆராயப்படும். அந்த நாகரிகத்தின் பழக்க வழக்கங்கள ஆராயும்போது நம் இன்றைய வழக்கங்களின் பின்னணி தெரியவரும். முக்கியமான தமிழறிஞர்களுக்கு மேல்நாடுகளிலும், வடநாடுகளிலும் தேவை ஏற்பட்டு அவர்களுக்கு கொஞ்சம் சில்லரை புரளும்.

ஒரு மொழியை செம்மொழி என்பதற்கு என்ன தகுதி வேண்டும்?

குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டாவது பழசாக இருக்க வேண்டும். இங்கிலிஷ், இந்தி எல்லாம் அடிபட்டுப் போய்விடும். கலாச்சார இலக்கியத் தொடர்ச்சி இருக்க வேண்டும். தமிழுக்குச் கூடுதல் சிறப்பு - இரண்டாயிரம் ஆண்டு பழமையான நம் இலக்கியத்தின் சில வரிகள் இன்றைய அன்றாடத் தமிழிலும், அரசியல் மேடைகளிலும், சினிமாப் பாடல்களிலும் ஒலிக்கும் அளவுக்கு தொடர்ச்சி இருப்பது. தமிழைச் செம்மொழியாக அறிவித்ததற்கு உண்மையிலேயே பெருமை பெற வேண்டியவர்கள் இருவர் - திவ்யப் பிரபந்தத்துக்கு வேதசாம்யம் அளித்த நாதமுனிகளும், திருமுறைகளுக்கு ஆலயங்களில் அந்தஸ்து அளித்த நம்பியாண்டார் நம்பியும்தான். செம்மொழி ஆராய்ச்சியில் இவர்கள் வாழ்வும், பணியும்கூட விரிவாக ஆராயப்படலாம்.

அண்மையில் மத்திய சர்க்காரில்... மன்னிக்கவும்; நடுவண் அரசில் ஏற்பட்ட அரசியல் மாறுதல்களால் கிடைத்த சலுகைகளில் முக்கியமாகக் கருதப்பட்ட தமிழைச் செம்மொழியாக அறிவித்து ஆவன செய்வதாகச் சொன்னதுதான். 'மைய அரசு அளித்த வாக்குறுதிகளிலேயே மிக மலிவு விலை வாக்குறுதி இதான்' என்று, இதனால் அரசியல் ஆதாயம் பெறாத சிலர் குறிப்பிட்டார்கள். சேது சமுத்திர கால்வாய் என்றால் ஆயிரம் கோடி வேண்டும். தமிழைச் செம்மொழியாக அறிவிக்க சாகித்திய அகாதமியிலிருந்து ஒரு ஜிஓ போதும். இந்த அறிவிப்பிலேயே புளகாங்கிதம் அடைந்து, சம்பந்தப்பட்ட தலைவர்களைப் பாராட்டு மழையில் நனைத்து மாவட்ட ரீதியாக விழாக்கொண்டாடுவர்கள ஒரே ஒரு கேள்வி கேட்டு என்ன பதில் வருகிறது என்று சோதித்துப் பாருங்கள். செம்மொழி என்றால் என்ன? உயிர் வாழும் அவசரங்களிலும், கவலைகளிலும் தினம்தினம் ஓடிக் கொண்டிருக்கும் சராசரித் தமிழனைக் கேட்டால், ''செம்மொழியோ, எதோ சொல்லிக்கிடறாங்க! அவங்க சொன்னா நல்லதாத்தான் இருக்கும். ஆள விடுங்க, 23பி வந்துருச்சு''

'செம்மொழி என்றால் என்ன?' என்று, ஒரு பிரபல பத்திரிகை கேள்வி பதிலில் 'சிவப்பான நம் பம்பாய் நடிகைகள் பேசும் தமிழ்' என்று கிண்டலடித்திருந்தது. 'இவ்வளவு பேசுகிறாயே! உனக்கு செம்மொழி என்றால் என்னவென்று சொல்லத் தெரியுமா?' என்று நியாயமான கேள்வி கேட்கலாம்.

அதனால், என் கருத்தில் செம்மொழி என்றால் என்ன என்பதை முதலில் அறிவித்துவிடுகிறேன். குறிப்பாக, அறிஞர்கள் மத்தியில், கழாக்காலுடன் பேதை புகுந்தாற் போல ஆகிவிடக் கூடாது. ஆங்கிலத்தில் 'கிளாசிக்கல்' என்பதற்கு ஈடான சொல்லாக செவ்வியல் பண்பைச் சொல்கிறார்கள். தமிழின் செம்மை, நிறம் சார்ந்ததல்ல; குணம் சார்ந்தது. செம்மை என்பதற்கு முதிர்ச்சி; பக்குவம் என்பது அகராதிப் பொருள். செந்தமிழ் என்பதிலும் இந்த வழக்குதான். ஒரு மொழி ஓர் அளவுக்கு பக்குவமும் முதிர்ச்சியும் அடைய முதல் தேவை - காலம். நேற்று வந்த ஜாவா மொழியை செம்மொழி என்று சொல்ல முடியாது. அந்த அளவில் தமிழுக்கு பழமையான மொழி; மிகப் பழமையான மொழிச் சான்று. மைய அரசு, 'ஆயிரம் வருஷம்' என்று சொன்னாலும், இரண்டாயிரம் ஆண்டு காலமாக அதற்கு இலக்கியம் இருப்பதை மேல்நாட்டு அறிஞர்கள் அறிவார்கள். எனவே முதிர்ச்சி அடைய போதிய காலம் கடந்துள்ள மொழி, தமிழ். முதிர்ச்சி மட்டும் போதாது. இலக்கியம் வேண்டும். இலக்கண முதிர்ச்சி வேண்டும். இலக்கணத்தில் முதிர்ச்சிக்கான கட்டமைப்புகள், விதிகள் என்று மொழியியலாளர்கள் அடையாளம் காட்டும் தகுதிகள் வேண்டும். ஓர் உதாரணம் சொல்கிறேன். தமிழில் ஆண்பால் பெண்பால் பகுப்பில் குழப்பமே இல்லை. ஆண், ஆண்தான். பெண், பெண்தான். மற்றதெல்லாம் அஃறிணை. சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் அஃறிணை இல்லாததால் ஸ்திரீலிங்க புல்லிங்க பாகுபாடு தன்னிச்சையாக ஓசை சார்ந்தே உள்ளது. இதனால் கால் விரல்கள் ஒரு பாலாகவும், கை விரல்கள் மற்றொரு பாலாகவும் கருதப்படும் வினோதங்கள் மொழியில் ஏற்படுகின்றன. இவ்வகையிலான Arbitrariness தமிழில் இல்லை. இது இலக்கணத்தின் முதிர்ச்சிக்கு ஓர் உதாரணம். இரண்டாவது தகுதி, தொடர்ச்சி. கிரேக்கம், லத்தின், சமஸ்க்ருதம் போன்றவையும் செம்மொழியாகக் கருதப்படுகின்றன. கிரேக்க மகாகாவியமான இலியட், நவீன கிரேக்கர்களுக்கு இப்போ சுத்தமாகப் புரியாது. லத்தீனும், சம்ஸ்க்ருதமும் மொழியியலாளர்களுக்கு மட்டும் புரியும். இம்மொழிகள் வழக்கொழிந்து அன்றாடத்தன்மையை இழந்துவிட்டன. தமிழில் அப்படியில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய சங்கப் பாடல்கள் இப்பொழுது படித்தால் ஏறக்குறய புரிகிறது.

நிலத்தினும் பெரிதே
வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவு இன்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

இந்த புறநானூற்றுப் பாடலில் ஓரிரு வார்த்தைகளை நவீனப்படுத்திவிட்டால் இன்றைய தமிழாகிவிடும். மற்றபடி இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து முடிந்தாலும் ஓரளவுக்கு புரிந்கொள்ளக் கூடிய மரபுத் தொடர்ச்சி தமிழுக்கு உள்ளது.

இன்றைய தமிழ், சங்ககாலத் தமிழ் அல்ல. தமிழ்மொழி தன் மரபுத்தொடர்ச்சியை கைவிடாமல் மாறிக்கொண்டும் வந்திருக்கிறது. மெல்ல மெல்ல தன்னை எளிதாக்கிக் கொண்டு வந்திருக்கிறது. மேகத்துக்கு இருபத்தேழு சொற்கள் இருந்தன. இப்போது மேகம், முகில் இரண்டுதான் மிச்சமுள்ளது. கொண்மூ, எழினி எல்லாம் கைவிடப்பட்டது. அலங்கல், தெரியல், பிணையல், தார், கண்ணி, தொடையல் எல்லாம் வழக்கொழிந்து போய் மலர்மாலை மட்டும் மிச்சமுள்ளது. புதிய வார்த்தைகளையும் தேவைப்பட்டபோது சற்றுத் தயக்கத்துடன் தமிழ் எடுத்துக் கொள்கிறது. இணையம், மென்பொருள், சைக்கிள், ரயில் போன்ற வார்த்தைகள் உதாரணம்.

தமிழ் மொழியின் தொன்மை குறித்து அதிகம் சந்தேகத்துக்கு இடமின்றி, தமிழ் சங்க நூல்களிலேயே இருக்கும் உள்சாட்சியங்கள் internal evidences தெளிவாகத் தெரிவிக்கின்றன. இதனால் தமிழ்மொழி கிமு 2ம் நூற்றாண்டிலிருந்து கிபி ஆறாம் நூற்றாண்டு வரை பண்பட்ட இலக்கிய நூல்கள் கொண்டதாக உள்ளது என்று தமிழ் மொழி பற்றி உணர்ச்சி வசப்படாத மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களே கருதும் அளவுக்கு சான்றுகள் உள்ளன. இதனால் இதன் பழமையைப் பற்றி கருத்து வேறுபாடு எதுவும் இல்லை.

பெரிப்ளுஸ், டாலமி, பிளினி போன்றோரும் தமிழ் மொழியைப் பற்றி தம் குறிப்புகளில் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம்விட, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன், இன்றைய தமிழனோடு பேசினால் ஓரளவு புரியும். உலகின் மற்ற செம்மொழிகளுக்கு இந்தத் தகுதி இல்லை என்பதால் தமிழை சிறந்த செம்மொழி என்பேன்.

ஓர் எழுத்தாளன் என்கிற தகுதியில் தமிழுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் சில உள்ளன.

1. செம்மொழியின் அத்தனை இலக்கியங்களையும் வகைப்படுத்தி, அவைகளுக்கு ஒருமித்த எண் அடையாளம் கொடுத்து, பாகுபடுத்தி அனைத்தையும் ஒரு தகவல் தளத்தில் கிடைக்குமாறு செய்ய வேண்டும். இந்த தகவல் தளத்தில் தமிழ் இலக்கியங்களை காலம், பொருள், பாவகை இப்படி பல தலைப்புகள் கீழ் - 'ரிலேஷனல்' தகவல் தளத்தில் அமைத்து, அதில் பலவகையிலான வினாக்களுக்கு விடை கிடைக்குமாறு செய்ய வேண்டும். உதாரணமாக, இரண்டாம் நூற்றாண்டில் வெண்பா வடிவத்தில் எதாவது பாடல் இருந்ததா? நச்சினார்க்கினியர் எந்த காலத்தவர்? 'முள்ளும் மலரும்' என்ற நாவல் எப்போது எழுதப்பட்டது? முத்தொள்ளாயிரத்தின் காலம் என்ன? கம்பர் எத்தனை நூல்கள் எழுதியுள்ளார்? 'அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென்யானே' என்கிற வரி எந்த நூலில் உள்ளது. இவ்வாறான கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்குமாறு தகவல் தளக் கட்டமைப்பு தேவைப்படுகிறது. இது தற்போதைய சூழ்நிலையில் ஏறக்குறய இயலாத காரியமாகப்படுகிறது. காரணம், தமிழின் எழுத்துருவாக்கத்தில் தரக்கட்டுப்பாடு இன்னும் வராததே! இன்று தமிழ் இலக்கியத்தின் அத்தனை நூல்களும் இணையத்தில் பல்வேறு ஆர்வலர்களால் உள்ளிடப்பட்டிருக்கின்றன. கனடாவில் ஒருத்தர் திவ்ய ப்ரபந்தம் அனைத்தையும் உள்ளிட்டிருக்கிறார். மதுரை திட்டத்தின் கீழ் திருமுறைகள் உள்ளிடப்பட்டுள்ளன. திருக்குறள் பலபேரால் பலமுறை உள்ளிடப்பட்டுள்ளது. சங்க நூல்கள், காப்பியங்கள், கம்பன்... எல்லாமே இணைய உலகின் ஒரு ஓரத்தில் தனிக்குடித்தனம் நடத்துகின்றன. இவைகளை அணுகி, பயன்படுத்த முக்கியத் தேவை - எந்த எழுத்துருவாக்கத்தில் அவை உள்ளன என்பது தெரிய வேண்டும். டிஸ்கி, டாப், டாம், யூனிகோடு என்று நான்கு வகைகள் உள்ளன. இது தேவையற்ற குழப்பம். யூனிகோடுமுறையைதான் மைக்ரோசாப்ட், google போன்றவர்கள் பயன்படுத்தியுள்ளனர். புகழ்பெற்ற தேடியந்திரங்களப் பயன்படுத்த வேண்டுமெனில் முதல்தேவை யுனிகோடில் உள்ளிட்டிருக்க வேண்டும். இனிவரும் உள்ளீடுகள் எல்லாம் யூனிகோடில் இருந்தாக வேண்டும் என்கிற நியதியை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும். இன்றைய யதார்த்தங்களில் இது சாத்தியமாகத் தெரியவில்லை. அவரவர் விருப்பப்படி உள்ளிடல் இன்னும் சில வருடங்கள் தொடரும் என்று தோன்றுகிறது. எனவே இம்மாதிரியான வேறுபாடுகளுடன் சமரசம் செய்து கொள்ளும்வகையில் எந்த எழுத்துருவில் இருந்தாலும் யூனிகோடுக்கு மாற்றிக் கொண்டு தேடக்கூடிய ஒரு தேடியந்திரத்தைச் செய்ய சில புத்திசாலிகள் முன் வந்திருக்கிறார்கள். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு தேடியந்திரம் செய்திருக்கிறார்கள் எனக் கேள்விப்படுகிறேன். இந்த முயற்சிக்கு நிதி தர வேண்டும். இன்றைய கணிப்பொறி இயலில், இது வேண்டாத வேலையென்றாலும் டெக்னாலஜிப்படி சாத்தியமே! இணையத்தில் தமிழில் ஒரு கேள்வி கேட்கப்பட்டால், அது எந்த இணைய தளத்தில்.... எந்த எழுத்துருவில் இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து உங்கள் உள்ளுர் எழுத்தில் காட்டும் மென்பொருள் ஒன்று தேவை.

என் அனுபவத்தில், நான் கதையோ, கட்டுரையோ எழுதிக் கொண்டிருக்கும்போது இம்மாதிரியான கேள்விகள் எழும். அவைகளுக்கு பதில் கிடைக்கும்வரை எழுத்து தடைப்படும். முன்பெல்லாம் புத்தகங்களையும், நூலகங்களையும் தேடிப்போவேன். இப்போது இணையத்தில் தேடிக் கண்டுபிடிக்க ஓரளவுக்கு முடிகிறது. தமிழ் இலக்கிய நூல்கள் முழுவதையும் நின்று நிதானமாகப் பாகுபடுத்தி எண்ணிக்கை கொடுத்து, தொடர்புகள் கொடுத்து வடிவமைத்தால் உலகெங்கும் ஒரே தகவல் தளத்தை அணுக, ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தரம் உயரும். யோக்கியமும் கூடும். ஆசியவியல் நிறுவனம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் போன்றோர் இதுவரை செய்த பாகுபாடுகளைக் கருத்தில்கொண்டு ஒருமிப்புக் குழு ஒன்று அமைத்து அதற்கு போதிய நிதியுதவி தந்து, இந்தக் காரியத்தை நிறைவேற்றவேண்டும்.

தாமஸ் மால்டன் போன்றவர்கள் சங்க இலக்கியங்கள catalogue அட்டவணைப்படுத்தியுள்ளார்கள். எந்த வார்த்தையை உள்ளிட்டாலும், அது சங்க வார்த்தையெனில் எந்த நூலில், எந்தப் பாடலில், எந்த வரியில் வருகிறது என்று சொல்கிறது இந்தப் பட்டியல். இது concordance. இதுபோல் தமிழின் மற்ற இலக்கியங்களுக்கும் தேவைப்படுகிறது. ஐம்பெரும் காப்பியங்கள், ராமாயண, பாரத காவியங்கள், பக்தி இலக்கியங்கள், இடைக்கால உதிரி இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் அனைத்திற்கும் பட்டியல்கள் தேவைப்படும்.

2. தமிழ் எழுத்து சீர்திருத்தம் பற்றி நிறைய பேசிவிட்டோம். இதை செம்மொழி ஆராய்ச்சியின் அங்கமாகக் கொள்ள முடியாது. எழுத்துக்கள் காலப் போக்கில் எவ்வாறு மாறி வந்திருக்கின்றன என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்யலாம். எழுத்தாளனான எனக்கு இனிமேல் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை. இருக்கிற எழுத்துகளைச் சுருக்காமல் இருந்தால் போதும். புதிய எழுத்துக்கள் தேவையென்றால் அவைகளுக்கு தன்னிச்சையாக எழுத்துகள் தோன்றலாம். அல்லது புதிய ஒலிகளை தமிழோசைகளாக மாற்றிக் கொள்ளலாம். உதாரணமாக ஆங்கில 'ஸர்' என்பதை, தமிழில் 'சார்' என்று ஆகிவிட்டது. இதில் நாம் ஜப்பானியர்களின் முறையைக் கடைப்பிடிக்கலாம். ஆங்கில வார்த்தைகளை அவர்கள் தங்கள் நாக்குக்கு சௌகரியமாக, ஒலிமாற்றம் செய்து கொள்கிறார்கள். 'பால்' என்பத, 'பாரு' என்கிறார்கள். கம்ப்யூட்டர் என்பதை, கம்யுத்தா என்று மாற்றிக்கொள்கிறார்கள். ல, வ ஓசைகள் அவர்களுக்கு வராது. அதைப்பற்றி கவலையே படுவதில்லை. ல ஒலியை, ர ஒலியாக மாற்றிக் கொள்கிறார்கள். 'வ'வை, 'ப'வாக. பெங்காலிகள் போல. நாம்தான் தமிழின் தூய்மை, தொன்மை என்பதைக் கட்டிக்கொண்டு புதிய வார்த்தைகளைப் பிரயோகிக்க, அல்லது ஒலிமாற்றத் தயங்கி ஒவ்வொரு வார்த்தைக்கும் தமிழ் தேடுகிறோம். இதிலும் ஒரு சிக்கல். புதிய சிக்கல். எத்தனை தமிழார்வலர்கள் உள்ளனரோ அத்தனை மொழிபெயர்ப்புகள் உள்ளன. அயல் வார்த்தைகளை நமதாக, நமக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் அல்லவா? ஆங்கிலக் கலைச் சொற்களை அப்படியே உபயோகிக்கலாம் என்று சொன்னால், அடிக்க வருவார்கள். மொழிபெயர்ப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. மொழி பெயர்த்த சொற்களில் ஒரு தரநிர்ணயம் கொண்டுவரவேண்டும். கலைச் சொற்களுக்கான ஒரு இணைய தளத்தில் இதுதான் எல்லோரும் பயன்படுத்த வேண்டிய மொழி பெயர்ப்பு என்று ஒப்பந்தம் வைத்துக்கொண்டால், அவைகளைப் பயன்படுத்துவதில் என் போன்ற எழுத்தாளர்களுக்கு தயக்கமே இல்லை. அதைப் பற்றி நான் உணர்ச்சிவசப்பட மாட்டேன். அதன் பொருத்தம் பற்றி கேள்வி கேட்கவும் மாட்டேன்.

எனக்கு இன்னொரு யோசனை தோன்றுகிறது. செம்மொழியின் ஏராளமான வார்த்தைகளை நவீன தமிழ் இழந்துவிட்டது. அந்த வார்த்தைகளை மறுபடி கொண்டுவந்து நவீன தமிழின் கலைச்சொற்களாக பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் கலைச்சொற்களுக்கு லத்தீன், கிரேக்க வார்த்தைகள பயன்படுத்துவதுபோல் நம் மருத்துவம், கணிப்பொறியியல், வேதியியல், இயற்பியல், கணிதம் போன்றவற்றுக்கு செம்மொழிச் சொற்கள மறுபயன்படுத்தலாம். உதாரணமாக வல்லினம், மெல்லினம், இடையினம் என்பதற்கு HARDWARE, SOFTWARE, FIRMWARE, INPUT, OUTPUT அகம், புறம். புதுசாகச் சொற்கள அமைப்பதற்கு மாறாக பழைய சொற்களையே புதுப்பித்து, பாலிஷ் போட்டு பயன்படுத்தாமல் செம்மொழி தமிழுக்கு ஒருகால வரையறை சொல்ல வேண்டும் என்ற கருத்துள்ளவர்கள் சில அறிஞர்கள். அதாவது, ஆறாம் நூற்றாண்டு வரைதான் செம்மொழி. அதன்பின் வருவது இடைக்காலத் தமிழ். அதன்பின் நவீனத்தமிழ் என்று வரையறை செய்ய வேண்டும் என்கிறார்கள். இது பற்றியும் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் நல்லது. செம்மொழி ஆராய்ச்சி பல்கலக்கழகங்களில் தமிழ் நாற்காலிகளில் மட்டும்தான் இப்போது நிகழ்கிறது. இன்றைய சராசரித் தமிழனுக்கு இவ்வகை ஆராய்ச்சிகளால் நேரடியாக பயன் எதுவும் இருக்காது. மறைமுகமான சில பயன்கள் ஏற்படலாம். தமிழ் ஆராய்ச்சி மாணவர்களுக்கு அதிகப்படியான நிதி கிடைக்கலாம். அவர்கள் வீட்டில் வரவேற்பறையில் திண்டுகள் வைத்து தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதனப் பெட்டி போன்றவை வாங்கலாம். செம்மொழி ஆராய்ச்சி இவைகளுடன் நின்றுவிடக்கூடாது. சமூகவியல், பொருளாதாரம், அறிவியல், அரசியல், வேளாண்மை என எல்லாத் துறைகளிலும் செம்மொழி ஆராய்ச்சி நிகழ வேண்டும். எல்லா இயலுக்கும் செம்மொழியில் உதாரணங்களும், சொற்களும் உள்ளன.

3. தமிழ் மொழி ஒன்றில்தான் இணையத்தில் கோப்புகளை அனுப்ப, இன்றய தேதிக்கு சுமார் 26 முறைகள் உள்ளன. விசைப்பலகை ஒதுக்கீடு நான்கு உள்ளது. கிரந்த எழுத்துக்களின் இடம் பற்றி தீர்மானமின்மை. தமிழ் எண்கள் குறித்தும். எழுத்துருவில் டாப், டாம், டிஸ்கி, யுனிகோடு, இன்னும்விட்டுப்போன ஒன்றிரண்டு. எத்தனை எத்தனை? இணையம் என்னும் மாளிகையில் நுழைவதற்கு முன்வாசலிலேயே நின்றுகொண்டு ஒருவரை ஒருவர் நுழையவிடாமல் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற செம்மொழி தமிழுக்கு என்று ஒரே ஒரு விசைப்பலகை ஒதுக்கீடு. ஒரேஒரு குறியீடு. அது, யுனிகோடு கன்ஸார்ட்டியத்தின் அங்கீகாரத்துடன் நிலைப்படுத்த வேண்டும். செம்மொழியில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் எல்லோருக்கும் தெரிவதற்கு இது மிக முக்கியமான செயல்.

4. தமிழின் அகரவரிச நெடுங்கணக்கு வரிசையை நெறிப்படுத்த வேண்டும்.

5. செம்மொழி ஆராய்ச்சி, முனைவர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் உரியது என்பதை அரசு சார்ந்த நிறுவனங்கள் உணர வேண்டும். செம்மொழிக்கு வழங்கப்படும் நிதியுதவி செம்மையான முறையில் பயன்படுத்தப்படுவதை ஐ ஏ எஸ் அதிகாரிகள் தீர்மானிக்கக்கூடாது. தமிழ்மொழியில் சிறந்த ஆராய்ச்சியாளர்களான வையாபுரிப்பிள்ளயும், வானமாமலையும், டிகேசியும் வக்கீல்கள்!

6. தமிழில் எந்த மூலையிலிருந்தாலும் சமர்ப்பிக்கப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் பிப்லியோகிராஃபி - நூல் அடைவு அல்லது நூல் விவரப் பட்டியல் வேண்டும். செம்மொழி என்று அலங்கார ஒப்பனைகள் செய்து தங்கக் கூண்டில் அடைத்துவிடுவார்களோ என்கிற பயம்தான் என் போன்ற எழுத்தாளர்களுக்கு ஏற்படுகிறது.

7. ஆசியவியல் நிறுவனம் மேற்கொண்டிருக்கும் லெக்ஸிக்கன் விரைவில் முடிக்க வேண்டும். அவர்களுக்கு நிதியுதவி தரவேண்டும். அதே போல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிலையம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் போன்றவர்களுக்கும் செம்மொழி ஆராய்ச்சியில் நிதியுதவவேண்டும். இவர்கள் செய்து வரும் பணி இதுவரை கவனிக்கப்படவில்ல. சில மிகச் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

8. தனியார் பதிப்பகங்கள் ஆராய்ச்சி நூல்களை வெளியிட உதவி தரவேண்டும்.

9. அண்ணா பல்கலைக்கழகத்தின் 'களஞ்சியம்' போன்ற செம்மொழிக்கான அங்கீகாரம் பெற்ற ஓர் ஆராய்ச்சி இதழ் பதிப்பிக்கவேண்டும். அதன் ஆசிரியர் குழுவில் பன்னாட்டு அறிஞர்களும் இடம் பெறவேண்டும்.

10.செம்மொழியில் எல்லா இலக்கியங்களுக்கும் திருத்தப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட பதிப்பு கொண்டு வரவேண்டும்.

தமிழ் பிசி என்று ஒரு அமைப்பை லினக்ஸ் ஆர்வலர்கள் சேர்ந்து அமைத்தோம். ரெட் ஹாட் இதற்கு நல்ல ஆதரவு தருகிறார்கள். தமிழ் இணையப் பல்கலைக்கழகமும் ஆதரவளித்திருக்கிறது. தமிழ்சார்ந்த மென்பொருள் அமைப்பதற்கு ஓப்பன் சோர்ஸ் என்னும் திறந்தவெளி அமைப்புத்தான் சரிப்பட்டு வருகிறது. ஆளாளுக்கு தமிழைக் காப்பபாற்றியே தீருவேன். நான் காப்பாற்றுவதுதான் சரியான காப்பாற்றல் உன் காப்பாற்றல் வெத்து என்கிற மனப்பாங்கு தமிழர்களிடயே இருக்கும்வரை அவரவர் போக்குக்கு காப்பாற்றட்டும் என்று விட்டுவிட்டு, அவைகளில் நல்லவை சிறந்தவை புழக்கத்தில் வந்து மற்றவை தாமாகவே வழியில் உதிர்ந்துவிடும். இல்லையென்றால் டிஸ்கி, டாம், டாப், இஸ்கி, யுனிகோடு என்று எத்தனை குறியீட்டுத்தரங்கள், ரோமன், ஃபோனிட்டிக், பழைய தட்டச்சு, புதிய தட்டச்சு என்று எத்தனை விசைப்பலகை ஒதுக்கீடுகள்! இவைகளில் எவை பிழைக்கும்.

தமிழைக் கணிப்பொறியில் பார்க்கும் பிரமிப்பு முதலில் ஓயவேண்டும். இதுவரை செய்ததே போதும் என்று தமிழர்கள் உணரும்வரை தினப்படி புதிய முயற்சிகளில் நாம் நேர விரயம் செய்துகொண்டு, மற்ற அத்தியாவசியங்கள கவனிக்காமல் விட்டுவிடுவோம். இதன் காரணங்களை இப்போது அலசுவதில் பயனில்லை. புதிதாக தமிழில் ஏதேனும் மென்பொருள் சூழ்நிலையை முயலும்போது நமக்கு தேவைப்படுவது ஒருகலைச் சொல் அடைவு. எல்லோரும் பயன்படுத்துமாறு கலைச்சொற்களை ஓரிடத்தில் ஒரு வலைமனையில் பதிப்பித்து அதை ஊற்றுக்கண்ணாக எல்லோரும் பயன்படுத்தவேண்டும். இந்த கலைச்சொற்களின் அவசியத்தைத்தான் நாங்கள் முதலில் உணர்ந்தோம். இதற்கு ஓப்பன் ஆஃபீஸ் போன்ற மேல்மேசை சூழலுக்கு ஏற்ற எண்ணாயிரம் வார்த்தைகளை முதலில் பதிப்பித்தோம. இப்போது கேடிஇ மோசிலா போன்றவைக்கு உண்டான தனிப்பட்ட வார்த்தகளையும், செய்திகளையும், தமிழாக்கிக் கொண்டிருக்கிறோம். இவைகளில் மாறுதல்கள் செய்ய சில யோசனை கூறுகிறார்கள். இந்த யோசனைகள் மதிப்பிட்டு உடனடியாக மாற்றங்கள் செய்யவும் ஓப்பன் ஆபிஸ் சூழல் அனுமதிக்கிறது. தமிழ் மொழிக்கு இவ்வாறு அதன் உலகளாவிய ஆர்வக்கோளாறுகளயும் மீறி நல்லது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு தமிழில் இதெல்லாம் சாத்தியம். தமிழ் எழுத்துகளை கணிப்பொறியில் பார்க்கலாம், தமிழிலக்கியங்களை தகவல்தளமாக அமைக்கலாம் போன்ற மேம்போக்கான பயன்பாடுகளைக் கடந்து, தமிழில் வாணிபம் உலகளாவிய வர்த்தகம் செய்ய தமிழ் மொழி அறிவு மட்டும் போதும் என்கிற சூழ்நிலை உருவாகத் தொடங்கும். பாரதி, ''சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு, சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்'' என்றது சொன்னது இப்போது யூனிகோடு மூலம் சாத்தியமாகியிருக்கிறது. ~ சுஜாதா


இரங்கல் கூட்டம்



சுஜாதாவின் சீடர் எழுத்தாளர் நண்பர் இரா. முருகன் வலைப்பதிவில் இருந்து இவ்வறிவிப்பு.